Google

தியானம் என்பது ஒரு பரிசோதனை - OSHO



தியானம் என்பது ஒரு பரிசோதனை"

கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
பரவாயில்லை;தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
பரவாயில்லை;தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு? என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை.கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது. நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும். அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம்;நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம்;எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன். முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன.எண்ணங்கள் மறைந்ததும்,திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன.எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள்.அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும்.ஆனால் நீங்கள் அழிய முடியாது.அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின்,அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை.அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே-தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே-இருக்கிறது.அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.அன்றே சந்தேகம் மறைகிறது.ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது. நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போதுதான் விசுவாசம் உருவாகிறது. நிரம்பித் ததும்புகிறது.அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே "விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்றுகூட நான் கூறுவதில்லை.
தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்.

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments