Google

தியானம் சந்தோஷத்தை கொண்டு வருகிறது என்ற சிந்தனை ஏன் மக்களின் மனதில் எழுகிறது? - OSHO



தியானம் சந்தோஷத்தை கொண்டு வருகிறது என்ற சிந்தனை ஏன் மக்களின் மனதில் எழுகிறது? உண்மையில் அவர்கள் சந்தோஷமான மனிதனை காணும்போதெல்லாம் அவர்கள் எப்போதும் ஒரு தியானதன்மையுள்ள மனதை அறிந்து வந்துள்ளனர். – இரண்டு விஷயங்கள் தொடர்பு பெற்று விட்டன. எப்போதெல்லாம் அவர்கள் ஒரு அழகான தியான ஒளிவட்டம் ஒரு மனிதனை சூழ்ந்திருப்பதை கண்டார்களோ, அந்த மனிதன் அதிக சந்தோஷத்தோடு இருப்பதை, பரவச அதிர்வோடு, பிரகாசமாக இருப்பதை அறிந்து வந்துள்ளனர். இரண்டு விஷயங்களும் தொடர்புள்ளவையாகிவிட்டன. நீ தியானதன்மையோடு இருக்கும்போது சந்தோஷம் வருவதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே தலைகீழாக உள்ளது. நீ சந்தோஷமாக இருக்கும்போது தியானம் வருகிறது.

ஆனால் சந்தோஷமாக இருப்பது கடினம். தியானத்தை கற்றுக் கொள்வது எளிது. சந்தோஷமாக இருப்பது எனில் உன்னுடைய வாழ்க்கைமுறையில் ஒரு தடாலடி மாற்றம், ஒரு திருப்பம் – ஏனெனில் இழப்பதற்கு நேரம் இல்லை. ஒரு திடீர் மாற்றம் – ஒரு திடீர் இடி முழக்கம் – ஒரு தொடர்பறுந்த நிலை…….. நீ திரும்பவும் பிறந்திருக்கிறாய். நீ திரும்பவும் வாழ்க்கையை உன்னுடைய பெற்றோர்கள் பழக்கவழக்கத்தை, உன்னுடைய சமுதாயம் உன்னுடைய நாடு, திணிக்காமல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்போது எப்படி வாழ்ந்திருப்பாயோ, உன்னை தொந்தரவு செய்ய யாரும் இல்லாவிட்டால் எப்படி இருந்திருப்பாயோ, அப்படி வாழ தொடங்குகிறாய் ஆனால் நீ தொந்தரவு செய்யப்பட்டுவிட்டாய்.

உன்மேல் திணிக்கப்பட்ட அத்தனை பழக்க வழக்கங்களையும் நீ உதறியாக வேண்டும் மற்றும் நீ உன்னுடைய சொந்த ஒளியைக் கண்டறிய வேண்டும். பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே, ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது. துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பதுதான். பணத்திற்க்கும் சந்தோஷத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ அதனை சந்தோஷத்திற்காக உபயோகப்படுத்துவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமயானால், நீ அந்த பணத்தை மேலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துவாய். பணம் வெறும் ஒரு சார்பற்ற சக்தி.

நான் பணத்திற்கு எதிரானவல்ல. என்னை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. நான் பணத்திற்கு எதிரானவல்ல, பணம் ஒரு அதிகரிக்கும்கருவி. நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷத்தை அடைவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷமற்ற தன்மையை அடைவாய். ஏனெனில் உன்னுடைய பணத்தை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் – உன்னுடைய பணம் உன்னுடைய பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும். நீ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய், உன்னிடம் சக்தி உள்ளது, நீ உனது சக்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உன்னுடைய சக்தியை வைத்து மேலும் அதிக விஷத்தை உனக்கு நீயே கொடுத்துக் கொள்வாய். நீ மேலும் அதிக துன்பபடுவாய்.

பணம் சந்தோஷத்தை கொண்டு வரப் போகிறது என்பதைப் போல மக்கள் பணத்தை தேடுகிறார்கள். கௌரவம் சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது என்பதைப் போல மக்கள் கௌரவத்தைக் தேடுகிறார்கள். வேறு எங்காவது மேலும் அதிக பணம் கிடைக்குமென்றால் எந்த நொடியில் வேண்டுமானாலும் மக்கள் அவர்களுடைய பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள, அவர்களுடைய வழிகளை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

முல்லா நசுரூதீன் மகள் வீட்டிற்கு வந்து அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம் அந்த ஊரிலேயே மிகப் பணக்காரனாக உள்ளவன்தான் என்றும், அவன்தான் அந்த பிள்ளைக்கு தந்தை என்றும் கூறினாள். முல்லா நசுரூதீன் மிகவும் கோபமடைந்தார். அவர் அந்த பணக்காரனின் வீட்டிற்கு துப்பாக்கியுடன் விரைந்து சென்றார். அவர் அந்த பணக்காரனை ஒரு மூலையில் பிடித்து தள்ளி, “இப்போது நீ உனது கடைசி மூச்சை விட்டுக் கொள், அல்லது கடவுளிடம் கூற வேண்டிய பிரார்த்தனை ஏதாவது இருந்தால் கூறிக்கொள்” எனக் கூறினார். பணக்காரன் புன்சிரிப்புடன், “நீங்கள் ஏதாவது கிறுக்குத்தனமாக செய்துவிடுமுன் கேளுங்கள். ஆமாம், உங்களுடைய மகள் என்னால் கர்ப்பமடைந்திருப்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு பையன் பிறந்தால் அந்த பையனுக்காக வங்கியில் நான் ஒரு இலட்சரூபாய் போட்டு வைத்து விடுகிறேன், ஒரு பெண் பிறந்தால் அந்தப் பெண்ணுக்காக ஐம்பதினாயிரம் ரூபாய் நான் வங்கியில் போட்டு விடுகிறேன்” எனக் கூறினான். முல்லா அவனுடைய துப்பாக்கியை எடுத்து விட்டு, “ஐயா, ஏதாவது தவறு நடந்து கர்ப்பம் கலைந்துவிட்டால், அல்லது வேறு ஏதாவது நடந்துவிட்டால் நீங்கள் திரும்பவும் என் பெண்ணுக்கு ஒரு வாய்ப்புத் தர தயாரா?” எனக் கேட்டான்.

SOURCE  : A  SUDDEN  CLESH  OF  THUNDER
Osho

Comments