Google

தியானம் என்றால் அப்படியே உட்கார்ந்துவிடுவது. - OSHO



தியானம் என்றால் அப்படியே உட்கார்ந்துவிடுவது.

மெளனம், செயலின்மை.

சிந்தனை செய்வது கூடக் கிடையாது.

நீ எந்தப் பக்கமும்  நகர்தலின்றி நிலைத்துவிடுவதால் மனம் தேவையில்லாமல் போய்விடுகிறது.
       
மனம் நீண்ட பயணங்களுக்கு வழிகாட்டி,  எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறாய்  என்றால் மனதுக்குக் கொண்டாட்டம்.

நீ நகர்ந்து  கொண்டிருக்கிறாய்  என்பதே மனதை விரித்துப் பெரிதாக்குகிறது.

ஆனால்,  எங்கேயும்  போகாமல் அப்படியே  அமர்ந்திருந்து எதையும்  செய்யாமல் இருக்கும்போது மனம் வருத்தப்படுகிறது.

தியானம்  செய்ய  எத்தனிக்கும் எவரும்  மனம் அப்படியே  வருத்தப்படும்போது அலுத்துப் போய்விடுவார்கள்.

அதுதான்  மனதின்  தந்திரம்.

"என்னப்பா நீ!

எங்கேயாவது போகலாம்  வா!

எதையாவது செய்யலாம் வா!

ஏன் உட்கார்ந்துக்கிட்டிருக்கே..???

சும்மா  அப்படியே உட்கார்ந்திருந்தா சலிச்சுப் போயிடுவே!" என்று  நச்சரிக்கிறது.
       
இது மனதின் தந்திரம்.

இந்தத் தந்திரத்துக்குப் பலியாகாமல் இருந்தால் சும்மா இருப்பதில் சலிப்பின்றிச் சுகமே காண்பாய்.

அதுதான்  ஞானியர் அனைவருடைய அனுபவமும்.

உன்னுடையதல்ல.

இது என்னுடைய  அனுபவம்.

என் அறையில்  என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்கிறாய்?

மெளனமாக உட்கார்ந்திருக்கிறேன்.

ஒன்றும் செய்யாமல் சும்மாயிருக்கிறேன்.

வசந்தம்  வருகிறது.

புல் தானாக வளர்கிறது.

வாஸ்தவத்தில் யாரும்  எதையும்  செய்ய  வேண்டியதில்லை.

வாழ்க்கை  தானாகப் போய்க் கொண்டேயிருக்கிறது.

வாழ்க்கை  தானாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நதியை யாராவது தள்ளிவிடுகிறார்களா என்ன...???
       
ஆனால்  ஆரம்பத்தில்  மனம் சலிப்பை உணர்த்தும்.

சலிப்பு  மனதின்  தந்திரம்.

என்னைத் தொடர்ந்து  வராமல் இருந்தால்  சலித்துப் போய்விடுவாய்.

என்னோடு வராவிட்டால்  அனுபவிக்க ஏதுமில்லாமல் போய்விடும்.

வா! என்னோடு வந்துவிடு.

பிரமாதமான களியாட்டத்துக்கெல்லாம் உன்னைக் கூட்டிப் போகிறேன்" என்கிறது.
         
களியாட்டங்கள் மனம் உனக்குத் தரும் கையூட்டு.

ரேடியோவைப் பாட விடு.

டிவியைப் போடு,

சினிமாவுக்குப் போ,

கடைசிக்குக் கிளப்புக்காவது போ

வம்பு பேசு.

எதையாவது செய்.
       
எதையும்  செய்யாமல் இருந்தால்  மனம் தரும் தண்டனைதான்  சலிப்பு.

தியானிக்க எத்தனம் செய்கிறவனுக்கு மிகப் பெரிய  பிரச்சனையே இந்தச் சலிப்புத்தான்.
       
ஆனால்  சலிப்பைப் பற்றி  எந்தக்  கவலையும்  இல்லாமல்  அப்படியே  உட்கார்ந்துவிட முடியமானால்

சலிப்பு ஒரு பக்கம்  அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று  விட்டுவிட்டு

சலிப்பு  உன்னை  எப்படியும்  பாதிக்காமல்  பார்த்துக் கொள்ளும்போது மூன்றிலிருந்து ஒன்பது மாதத்துக்குள் சலிப்பு  மறைந்துவிடும்.
         
சலிப்புக்குப் பதிலாகப் புத்துணர்ச்சி பெறுவாய்.

குதித்தோடி வரும் ஆனந்தம் காண்பாய்.

இதுவரை உணர்ந்தறியாப் புத்துணர்வும் ஆனந்தமும் பெறுவாய்.

இதில் களியாட்டத்துக்கு ஏதுமில்லை.

ஏனென்றால்  அதில்தான்  ஏதுமில்லையே.

சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கிறாய்.

அந்த வெற்றிடத்திலிருந்து,

அந்த உதயத்திலிருந்து

அந்தப் பொறுமையினூடே

புத்தம் புதியதொரு நிறைவேற்றம் காண்பாய்.
 
மனிதனுக்கு மனிதன் செய்த  கொடுமைகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

'அடால்ப் ஹிட்லர்' மட்டுமே  குறைந்தது ஒரு கோடிப்பேரைக் கொல்வதற்குக் காரணமாய் இருந்திருக்கிறான்.

'ஜோசப் ஸ்டாலின் ' அவனுக்கு  மிகவும்  பின்தங்கிவிடவில்லை.

இந்த நூற்றாண்டில், நீங்கள்  இவையெல்லாம்  தொடர அனுமதிக்கப் போகிறீர்களா...???

நாங்கள் இந்த  உலகை வென்று  அதை மாற்ற அணு ஆயுதங்களை  உருவாக்கப் போவதில்லை.

ஏற்கனவே  எங்கள்  கைகளில் மாபெரும்  ஆயுதம்  இருக்கிறது.

அது தியானம் <3

<3 ஓஷோ <3                        

Comments