Google

ஞானக் களஞ்சியம் - OSHO



 ஞானக் களஞ்சியம்  

<3 தினசரி வாழ்வில் ஆன்மீகத்தை இணைப்பது எப்படி......???

சித்தர் பாடல்களைப் பார்க்கும்போது மிக சாதாரண விஷயமாகத் தெரியும்.

பல வார்த்தைகளுக்கு அர்த்தமும் புரியாது.

நேரிடையாகப் பார்த்தால் ஒரு அர்த்தம் இருக்கும்.

பொருளுணர்ந்து பார்க்கும்போதுதான் தத்துவம் புரியும்.

இதில் சிலவற்றை அறிந்துகொண்டு மனதில் போட்டுவைத்தால் இறையுணர்வு எப்போதும் இருக்கும்.

"மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு

தேங்காப் பால் ஏதுக்கடி...???

 குதம்பாய்.....!!!

தேங்காப் பால் ஏதுக்கடி......???'

குதம்பை என்றால் காதில் அணியும் ஒரு நகை.

இந்தப் பாடலை எழுதியவரும் குதம்பைச் சித்தர்தான்.

இந்திரிய சக்தியை வீணாக்காமல்,

மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி,

அந்த சக்தியானது சஹஸ்ராரத்தை அடையும் போது அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது.

அதன் விளைவாக அமிர்தத் தேன் உடலெங்கும் பரவும்.

இந்த அமிர்தத் தேனைத்தான் மாங்காப்பால் என்று இங்கே குறிப்பிடுகிறார்.

"மங்கா' என்றால் நிலைத்த, என்றும் பொலிவான என்று பொருள்.

மங்கா என்பது தான் கவிதைக்காக மாங்கா என்று பாடப்பட்டுள்ளது.

தேங்காப்பால் என்பது சிற்றின்பங்களைக் குறிக்கும்.

பேரின்பத்தை உணர்ந்தவர்கள் சிற்றின்பத்தை நாடமாட்டார்கள்.

இப்படி இறை இன்பத்தை உணர்ந்தவர்களுக்கு கரும்பும் துவர்க்குமாம்;

செந்தேனும் புளிக்குமாம்.

இதைத்தான் அருணகிரியார் "கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே' என்று கந்தர் அலங்காரத்தில் கூறியுள்ளார்.

அது சரி; அந்த மாங்காப்பாலை உண்ணும் விதம் எப்படி.....???

அழுகணிச் சித்தர் பாடல் ஒன்று இதை விளக்கும்.

"உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்

மச்சிக்கு மேலேறி வானுதிரம் தானெடுத்து

கச்சை வடம் புரிய காயலூர் பாதையிலே

வச்சு மறந்தல்லோ- என் கண்ணம்மா
வகை மோசமானேன்டி.'

ஆக்ஞையில் (இரு புருவங்களுக்கு நடுவில் தியானம் செய்து)

பிரம்ம எந்திரத்தை தரிசித்து நினைத்தால் அமிர்தத் தேனைப் பருகமுடியும்.

பேரின்பம் பெறமுடியும் என்பது கருத்து.

மச்சி என்பது உள்நாக்குக்கு மேலே.

ஊசிமுனை வாசல் என்பது பிரம்ம எந்திரம்.

இதற்குதான் காயலூர் பாதை எனப் பெயர்.

வானுதிரம் என்றால் குண்டலினி சக்தி.

கச்சை வடம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை முதலிய மூச்சு இயங்கும் நாடிகள்.


" நடுநெற்றியில் ஒளியை தரிசிப்பதுதான்.

ஞானக்கண்ணை மறந்து உலக வாழ்வில் திரிவதை,

 "வச்சி மறந்தல்லோ வகை மோசம் போனேன்' என்று குறிப்பிடுகிறார்.

இப்படி பேரின்பத்தை அனுபவிக்காமல் இருந்துவிட்டால் என்னவாகும்......???

பிறப்பு- இறப்பு என்ற வட்டம் தொடரும்.

இறப்பு பிறப்பு - பிறப்பு இறப்பு

இறைவன் உடல் தந்ததன் நோக்கம் நிறைவேறாமல் ஆகிவிடும்போது மறுபடியும் பிறப்பு ஏற்படுகிறது.

இதைத்தான்,

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி- அதை

கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி'

என்னும் சித்தர் பாடல் விளக்குகிறது.

கடவுள் அருளால் பத்து மாதம் கருவிலிருந்து உயிரானது உடலைப் பெறுகிறது.

இறைவன் உடல் கொடுப்பதன் நோக்கமே,

இறைவனை உணர்ந்து அவனை அடையவேண்டும் என்பதுதான்.

ஆனால் மக்கள் மாயையில் சிக்கி,

கண்டபடி வாழ்ந்து, உடலை வீணாக்கி,

நாட்கள் சென்றபின் இறந்து விடுகின்றனர்.

இதைத்தான் "கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி' என்று சித்தர் கூறுகிறார்.

இந்த கருத்தைதான் திருநாவுக்கரசர்,

"பிறந்தவாறு ஏதோ எண்ணிற் பெருநோய்கள் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே' என்று ஆறாம் திருமுறை திருத்தாண்டகத்தில் நமக்காக வருத்தப்பட்டுக் கூறுகிறார்.

பிறப்புக்கு காரணம் விஷய வாசனை.

விஷய வாசனை என்றால் என்ன....???

உலகம் சம்பந்தப்பட்டவை விஷயங்கள் எனப்படும்.

இதையே "விஷய வாசனை' என்கிறோம்.

நமது துன்பத்துக்கெல்லாம் காரணம் இந்திரியங்களுக்கு உட்பட்ட விஷயங்களில் மாட்டிக்கொள்வதுதான்.

நின்று நிலைக்கும் சுகம் - துக்க கலப்பே இல்லாத சுகம்

இவை எதுவும் நமக்குத் தெரியாமலே ஆகிவிடுகிறது.

இந்த விஷய வாசனைகள் குறைந்தால்தான் உள்ளதை உள்ளவாறு உணரமுடியும்.

Comments