Google

ஓஷோவின் பிறப்பு



**********#ஓஷோ#********
*************#ஓஷோவின் பிறப்பு#************
#பகுதி : - 62 - .............நான் வெளிப்படையாக உண்மையைப் பேசுவதைப் பார்த்து அவர் வெளியே வந்து , " சரி .....உனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கிறேன் " என்றார் .........

#பிறகு ஒருவழியாக உள்ளே சென்றேன் . ஆனால் அவருக்கும் எனக்கும் உள்ள மனவேற்றுமை , நாளாக நாளாக வளர்ந்துகொண்டுதான் இருந்தது . என் தகப்பனாருக்கு ஒரு குரு இருந்ததுபோல இவருக்கும் ஒரு குரு இருந்தார் . இவரால்தான் பிரச்சனையே வெடித்தது !

அந்த ஆள் வீட்டுக்குள் நுழைந்ததும் , நான் என் அத்தையிடம் , ' இவனைவிட ஒரு மோசமான ஆளை நான் இதுவரை பார்த்ததே இல்லை ' என்றேன் .

அவள் , " ஐயோ , வாயை மூடு என் கணவர் காதில் விழப்போகிறது ."

நான் , " அது எப்படியோ போகட்டும் . நான் சொல்லுவது சரியா , தவறா ? என்றேன் .

" அது சரிதான் .... ஆனால் அவர் என் கணவரது குரு ஆயிற்றே . "

"ஆனால் என்னால் சும்மா இருக்க முடியாது . நானும் அவரும் மோதித்தான் ஆகவேண்டும் . நான் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி , இப்பொழுது என்னால் தொல்லை ஆரம்பித்து விட்டது . "

அந்த ஆள் ஒரு ஆசனத்தில் அமர்ந்ததும் , நான் அவர் அருகில் சென்று , அவர் தலைமேலே என் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தேன் . அப்பொழுது அங்கு ஒரு கூட்டமே இருந்தது . அவர்களில் சிலர் , ' நீ என்ன காரியம் பண்ணுகிறாய் ? அவர் யார் என்று உனக்குத் தெரியாதா ? ' என்று கேட்டனர் .

' அவர் யார் என்று தெரிந்துகொள்ளுவதற்காகத்தான் அப்படிச் செய்தேன் . ஆனால் இந்த ஆளிடம் ஒன்றுமே இல்லையே ! '

அவர் மிகுந்த கோபத்துடன் எகிறிக் குதித்து , ' என்ன அவமானம் ? ' என்று கூச்சல் போட்டார் . அவர் கண்கள் கோபத்தால் நெருப்பு போல ஜொலித்தது . நான் , " தயவுசெய்து அமைதியாக இருங்கள் இப்படி நான் சொல்லுவது நீங்கள் எழுதிய புத்தகத்திலிருந்து எடுத்ததுதான் . அதில் நீங்கள் , ' உங்களை யாராவது கேவலமாகப் பேசினால் அல்லது நடந்து கொண்டால் , மிகவும் அமைதியாக இருங்கள் . அது குறித்து ஒன்றும் அலட்டிக்கொள்ளாதீர்கள் ' என்று எழுதியிருக்கிறீர்கள் .

' நீ என்னை கேவலப்படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டு வந்திருக்கிறாய் ? '

' நான் யாரையும் கேவலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை . நான் இப்போது பாவம் ; அந்த ஆசனத்தைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் ; உங்களைப் பற்றி அல்ல . அது நான் உபயோகிக்கும் நாற்காலி . நீங்கள் என் கேள்விகளுக்குச் சரியான பதில் கூறாவிட்டால் நீங்கள் அதைவிட்டு எழுந்திருக்க வேண்டி வரும் . '

என்ன ஆர்ப்பாட்டம் , என்ன குதிப்பு , என்ன பேச்சு ! அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் . அவர் பேசிய அசிங்கமான வார்த்தைகளை என்னால் மீண்டும் சொல்ல முடியாது . அவர் , ' இவன் இந்த வீட்டில் நுழைந்திருக்கிறான் என்று தெரிந்ததும் , இது வீடாக இருக்காது என்று எனக்குத் தெரியும் ' என்றார் .

நான் , ' இந்த வகையில் , நீங்கள் சொல்லுவது சரிதான் . சரி , ஏன் அப்படி இல்லை என்று மேற்கொண்டு சொல்லுங்கள் . '

' நீ ஒரு நாத்திகன் - அதுதான் காரணம் ! '

' ஆமாம் . அது ஒரு ஓரளவு உண்மைதான் . நான் எதையும் , மூடத்தனமாக நம்பமாட்டேன் . நம்பிக்கை என்பது மூடத்தனமானது , குழந்தைத்தனமானது . ஒரு புத்திகூர்மையுள்ளவன் எதையும் ஆராயாமல் அப்படியே நம்பமாட்டான் . ஆனால் , இப்படிப்பட்டவர்களால்தான் இந்த உலகம் நிரப்பப்பட்டிருக்கிறது . அதுதான் பரிதாபம் . ' .........தொடரும் ........

Comments